காரணம் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்தவேளையில் அவர்களே தமது ஏகப்பிரதிநிதிகள், தமது குறிக்கோள் தமிழீழமே, தமது உயிருள்ளவரை அதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என மேடைகளில் முழங்கிய நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று தமிழீழத்தையும் விட்டுவிட்டு தமிழர்களையும் விட்டுவிட்டு சிங்கள பேரினவாதிகளின் காலினை கழுவ முயற்சிப்பது வேதனையான விடயமாகும்.
அதிலும் இலட்சக்கணக்கான தமிழ் உறவுகளை ஈவிரக்கமின்றி கொலை செய்து “பஞ்சமாபாதகன்”என பெயர் பெற்ற ஒருவனை எமது இனத்தை சேர்ந்த ஒருவன் கட்டித்தழுவி அன்புகொண்டது எமது இனத்தை வெட்கி தலைகுனியச்செய்துள்ளது.
அதிலும் தமிழ் இனத்தை பாதுகாக்கப்போவதாக கூறி அந்த மக்களின் வாக்குகளைப்பெற்று பாராளுமன்றம் சென்ற ஒருவர் அந்த இனத்தை படுகொலைசெய்த ஒருவனிடம், படுகொலைக்களத்தின் இரத்தம் காயுமுன்பே சென்று மண்டியிட்டது பெரும் வரலாற்று துரோகமே. இவ்வாறான செயலைப்புரிந்த பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர் அவர்கள் இதனை உணர்ந்துகொள்ளாதது ஏன்?
விடுதலைப்புலிகள் அழிந்துவிட்டார்கள்,இனி நம்மைக்கேட்க யாரும் இல்லை,நமது என்னம்போன்று செயற்பட்டு,சிங்கள அரசிடம் எவ்வளவு நல்லபெயர் வாங்கமுடியுமோ அவ்வளவு வாங்கி தமது பெட்டியை நிறைத்துக்கொள்வோம் என இவர்கள் நினைக்கின்றனர்.
அது ஒருபோதும் நிறைவேறாது. இதனை வன்னி மண்ணில் புதையுண்ட ஆயிரக்கணக்கான பேராளிகளினதும் பொதுமக்களினதும் ஆத்மாக்கள் அனுமதிக்காது. இது என்றும் தமிழினத்துக்கு துரோகமிழைக்கும் எவரையும் விட்டுவைக்காது என்பது எமது மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.
இது மட்டுமல்ல மறுபுறத்தில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழினத்துக்கு பேரம்பேசுவதாக கூறி தமது பைகளை நிறப்ப பேச்சுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதிலும் நான்கு பிரிவாக இந்த தமிழ் தேசிய கட்சி உடைவடைந்துள்ளதானது தமிழ் மக்களை பெரும் ஏமாற்ற நிலைக்கு தள்ளியுள்ளது.
இன்று ஜனாதிபதித்தேர்தலில் சிங்கள பேரிவாதக்கட்சிகளில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுமே தமிழர்கள் தொடர்பில் உறுதியான நிலைப்பாடுகளில் தான் உள்ளனர்.
அதாவது தமிழர்கள் இலங்கையில் வாழலாம் ஆனால் உரிமைகள் கேட்க முடியாது.நாங்கள் தருவதை பெற்றுக்கொண்டு இருக்கவேண்டும்,மேலதிகமாக எதனையும் கோரமுடியாது.இது பௌத்த நாடு,இது பௌத்தர்களுக்கே சொந்தம்.இதுவே இன்று இரு பேரினவாத வேட்பாளர்களினதும் கோசங்களாக இருந்துவருவது யாவரும் அறிந்த விடயமாகும்.
இவர்களுடன் அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சாரார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.இந்த பேச்சுவார்த்தையில் எவற்றை தாங்கள் வலியுறுத்தியதான எந்த தகவல்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை வெளியிடவில்லை.
இந்த தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன?நாங்கள் தமிழ் மக்கள் தொடர்பில் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களிடம் எவற்றை எதிர்பார்க்கின்றோம்?தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன?போன்ற எந்த விடயங்கள் குறித்தும் இதுவரை எந்த கருத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிடவில்லை.
எனினும் வடகிழக்கு மக்கள் “முரசு”க்கு தெரிவித்த கருத்துகளின் படி இரு வேட்பாளர்களில் எவர் வந்தாலும் தமிழ் மக்கள் மீதான காழ்ப்புணர்வு மாறப்போவதில்லை.அவர்கள் தமிழர்களுக்கு ஒரு தீர்வை தருவார்கள் என நம்பினால் அது வெறும் முட்டால்தனமாகவே இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
இந்தக்கருத்து அந்த மக்களின் 25வருட போராட்ட வரலாற்றில் இருந்து பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவர் தொடர்பில் அவர்கள் கொண்டிருந்த பார்வையின் அடிப்படையிலும் வெளியிடப்பட்ட கருத்தாகும்.
அன்று பாராளுமன்ற தேர்தலில் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகள் எடுத்த தீர்க்க தரிசனமான முடிவின் காரணமாகவே அன்று சிங்கள அரசாங்கங்களின் பொய்முகம் வெளியில் தெரிய ஆரம்பித்தன.
அந்த முடிவினை விடுதலைப்புலிகள் எழுந்தமானமாக எடுக்கவில்லை.நன்கு ஆராய்ந்து தமிழ் உணர்வாளர்கள்,தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்து எடுத்தமுடிவாகும்.அந்த முடிவின் காரணமாக சில பின்னடைவுகள் தமிழினத்துக்கு ஏற்பட்டாலும் கூட நீண்டகால அரசியல் நோக்கங்களுக்கு அந்த முடிவு சிறந்த வழிகாட்டலாக அமைந்திருந்தது.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவ்வாறான ஒரு முடிவை எடுப்பார்களானால் இன்று “புலி பேய்”காட்டிவரும் சிங்கள அரசுகளுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் சிறந்த செய்தியாக இருக்கும்.
இன்றைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்க்கமான ஒரு தீர்வுத்திட்டத்தை தயாரிக்கவேண்டிய அவசரத்தில் இருக்கின்றது.அல்லது ஏற்கனவே தமிழ் உணர்வாளர்களால் தயாரிக்கப்பட்ட தீர்க்கமான தீர்வுப்பொதிகள் நம் கைவசம் இருக்கின்றன.
நீங்கள் வெறும் நிலையில் நின்று பேசாமல் அந்த தீர்வுப்பொதிகளை வெளிப்படையாகவே முன்வையுங்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவு தருவார்கள் தெரிவியுங்கள்.அவ்வாறாயின் அதற்கான உறுதிமொழியை பெற்றுக்கொள்ளுங்கள்.இவையனைத்தையும் கறுத்த கண்ணாடி கொண்ட அறைகளுக்குள் நடத்தாமல் திறந்தவெளி அரங்கில் மூவின மக்களும் கண்டுகளிக்ககூடியவாறு நடத்துங்கள்.(ஏனென்றால் தேர்தல் முடிந்தவுடன் உறுதிமொழி வழங்கிய பல சிங்கள அரசுகள் தமிழர்களை வேரறுப்பதில் மும்முரமாக இருந்தன என்பதை மறந்துவிடக்கூடாது.)
இன்றை நிலையில் இது தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள பாரிய சந்தர்ப்பமாகும்.எமது உரிமை,எமது நிலம்,எமது உறவுகள் எம்மிடம் இருந்து பிரிக்கப்படுவதையும் கொலைசெய்யப்படுவதையும் நிறுத்துவதற்கான சரியான சந்தர்ப்பம் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கைகளில் உள்ளது.
தம்மிடம் உள்ள அனைத்துவெறுபாடுகளையும் களைந்து கருத்துகளால் பிரிந்துள்ள தமிழ் கட்சிகளையும் ஒன்றினைத்து இதனை மேற்கொள்வதன்மூலம் தமிழர்களுக்கு ஏதாவது ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள்.அவ்வாறு இல்லையாயின் தமிழ் மக்களின் முடிவினை இந்த உலகெங்கும் பறைசாற்ற வழி ஏற்படுத்துங்கள்.






.jpg)







.jpg)





