மணிப்பூர் அருகே நீர் மின்நிலையம் அமைப்பதற்காக பராக் ஆற்றின் குறுக்கே திபாய்முக் அணை கட்டப்படுகிறது. இதை வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான காலிதா ஜியாவின் பிஎன்பி கடுமையாக எதிர்க்கிறது.
இதனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பராக் ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டால் வங்கதேசத்தின் பாசன பகுதி கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கங்கை நதியிலிருந்து உரிய தண்ணீரைப் பெறுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதைப் போல பராக் நதியில் அணை கட்டும் விவகாரமும் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடியும் என நம்புவதாக ஷேக் ஹசீனா வங்கதேச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக காலிதா ஜியா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தனது கட்சியைச் சேர்ந்த அறிஞர்களை மணிப்பூருக்கு அனுப்பி விவரங்களை திரட்டுவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
அணை கட்டப்படும் பகுதிக்கு நாடாளுமன்றக் குழுவை அனுப்ப இருப்பதாகவும் அவர்களுடன் காலிதா ஜியா கட்சியின் நிபுணர்களும் சேர்ந்து கொள்ளலாம் என ஹசீனா கூறியிருந்தார்.
தேசிய நலனைக் கருத்தில் கொண்டு பராக் நதியில் அணை கட்டும் இடத்தைப் பார்வையிட ஒரே குழுவாக செல்வதன் மூலம் வங்கதேசத்தின் நலனை உணர்த்த முடியும் என்று காலிதா ஜியா தனது கடிதத்தில் எழுதியிருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
திபாய்முக் பகுதிக்கு பிஎன்பி கட்சி சார்பில் தனிக் குழுவை அனுப்புவது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருப்பதால் அதற்கு வெளியுறவு அமைச்சகம் மூலம் அனுமதி பெறவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான பிஎன்பி சார்பில் சிலர் குழுவில் இடம்பெற விரும்பினால் அதைச் சேர்ப்பதில் எவ்வித தயக்கமும் கிடையாது. அவர்களும் நேரில் சென்று இடத்தைப் பார்வையிடலாம். இருப்பினும் காலிதா ஜியா அனுப்பிய கடிதத்தை தான் இன்னமும் படிக்கவில்லை, இருப்பினும் எதிர்க்கட்சி அளித்துள்ள ஒத்துழைப்பு இப்பிரச்னையைத் தீர்க்க பெரிதும் உதவும் என்றும் ஹசீனா கூறினார்.
எதிர்க்கட்சியான பிஎன்பி-க்கு தற்போதைக்கு வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. எனவேதான் இதைக் கையிலெடுத்துள்ளனர். திபாய்முக் அணை கட்டுவது குறித்த பிரச்னையை அவர்கள் ஆட்சிக் காலத்திலேயே எடுத்திருக்கலாமே? என ஹசீனா கேள்வியெழுப்பினார்.
திபாய்முக் அணை பிரச்னை தொடர்பாக இந்தியா-வங்கதேசம் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வங்கதேச வெளியுறவு அமைச்சர் திபுமோனி, அணை கட்டும் பணிகளை இந்தியா நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரினார்.
அணை கட்டும் இடத்துக்கு வங்கதேச நாடாளுமன்ற குழுவை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் வங்கதேசம் சென்றிருந்தபோது விளக்கம் அளித்தார். நீர்மின் திட்டத்துக்கு மட்டும்தான் அணை கட்டப்படுகிறது என்றும் அதனால் நீர்பாசனம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும் உறுதியளித்திருந்தார்.
கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் இந்த அணை கட்டப்படுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதோடு, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று ஹசீனா குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக வங்கதேசத்துக்கான இந்திய தூதர் பினக் ரஞ்சன் சக்ரவர்த்தி கூறிய கருத்துக்கு பிஎன்பி கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





