ரஷியாவுக்கு பிடிக்கவில்லை
ரஷியாவில் இருந்து பிரிந்து தனிநாடாக இருக்கும் நாடு ஜார்ஜியா. இது ரஷியாவின் அங்கமாக ஒரு காலத்தில் இருந்தபோதிலும் இப்போது அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு கொண்டு உள்ளது. அமெரிக்கா தலைமையிலான ராணுவ கூட்டமைப்பிலும் சேர முன்வந்து உள்ளது.
இது எல்லாம் ரஷியாவுக்கு பிடிக்கவில்லை. தன் வீட்டு வாசலில் அமெரிக்காவின் ராணுவம் நிற்பதை அது விரும்பவில்லை.
இதனால் மனம் கசந்து போன அது ஜார்ஜியாவில் தனி நாடு கேட்டு வரும் தெற்கு ஒசெட்டியா மாநில மக்களை பயன்படுத்தி ஜார்ஜியாவில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
தனிநாடு கேட்கும் ஒசெட்டியா பிரிவினைவாதிகள், ஜார்ஜியா ராணுவம் மீது தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் மீது ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதும் ரஷியா தன் ராணுவத்தை அனுப்பியது.
போர் விமானங்கள் குண்டுகளை வீசின
ஜார்ஜியா மீது கடந்த 5 நாட்களாக ரஷியா தாக்குதல் நடத்தியது. தெற்கு ஒசெட்டியாவை கைப்பற்றி கொண்ட அது ஜார்ஜியாவின் கோரி நகர் மீது ரஷிய போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் 5 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.
இதற்கிடையில் தெற்கு ஒசெட்டியாவில் இனப்படுகொலைகளை ஜார்ஜியா நடத்திவருவதாக ரஷியா குற்றஞ்சாட்டி உள்ளது. ஜார்ஜியாவில் பலியான அனைவருமே ரஷிய பாஸ்போர்ட்டு வைத்திருந்தனர் என்றும் அது கூறி உள்ளது.
போர் நிறுத்தம்
இந்தநிலையில் போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்து உள்ளது. தெற்கு ஒசெட்டியாவில் ``அமைதி ஏற்படுத்தப்பட்டு விட்டதாலும்'' அமைதிப்படையினர் மற்றும் மக்களுக்கு பாதுகாப்பு மீண்டும் கிடைக்கத்தொடங்கி இருப்பதாலும் ராணுவ நடவடிக்கையை நிறுத்திவைக்கும்படி அதிபர் மெட்வடேவ் உத்தரவிட்டு இருக்கிறார்.
ஆக்கிரமிப்பாளர் தண்டிக்கப்பட்டு விட்டனர். பெரும் இழப்பை சந்தித்து இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
தெற்கு ஒசெட்டியாவை தொடர்ந்து பாதுகாக்கவேண்டும். ஜார்ஜியா ராணுவம் எதிர்ப்பு காட்டினால் அதை கிள்ளி எறியவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.
அதிபரின் அறிவிப்பு டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது அவருடன் ராணுவ மந்திரி அனட்டோலி செர்டியுகோவ் மற்றும் ராணுவ தலைமைத் தளபதி மகரோவ் ஆகியோர் உடன் இருந்தனர்.
அமைதித் திட்டத்துடன் பிரஞ்சு அதிபர் சர்கோசி ரஷியாவுக்கு சென்று இருக்கிறார். அதற்கு முன்னதாக இந்த அறிவிப்பை ரஷிய அதிபர் வெளியிட்டார்.
முன்னதாக ரஷியாவை கண்டித்து அமெரிக்க ஜனாதிபதி புஷ் வாஷிங்டனில் பேசியதாவது:-
புஷ் குற்றச்சாட்டு
ஜார்ஜியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் ரஷியா மதித்து நடக்க வேண்டும். ஆனால் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஜனாதிபதியான மிகையீல் சகாஷ்விலியை பதவியில் இருந்து இறக்கி, அவர் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க ரஷியா முயற்சி செய்து வருகிறது என்று குற்றஞ்சாட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், சுதந்திர நாட்டின் மீது ஆக்கிரமிப்பு நடத்தி, அந்த நாட்டு அரசாங்கத்தை மிரட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார். போர் நிறுத்தம் செய்து ஜார்ஜியாவுடனான பகையை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
புதின் கண்டனம்
ரஷிய பிரதமர் புதின் அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஜார்ஜியா தான் தெற்கு ஒசெட்டியா மீது தாக்குதல் நடத்தியது.
அதை விட்டு விட்டு ஜார்ஜியா ஏதோ பாதிக்கப்பட்ட நாடு போல மேற்கத்திய நாடுகள் சித்தரிக்கின்றன என்று கண்டித்தார். அதோடு ஈராக் போரில் ஈடுபட்டு இருந்த ஜார்ஜியா ராணுவ வீரர்களை விமானம் மூலம் நாடு திரும்ப அமெரிக்கா உதவி செய்து உள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையில், தெற்கு ஒசெட்டியா, அப்காசியா ஆகிய பகுதிகளை தவிர ஜார்ஜியாவை ஆக்கிரமித்துக்கொள்ளும் எண்ணம் எதுவும் எங்களுக்கு கிடையாது என்று ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை




.jpg)







.jpg)





